பொற்பனைக்கோட்டை தமிழி

 பொற்பனைக்கோட்டை தமிழி:


கடந்த நூற்றாண்டுவரை குகைத்தளங்களில் மட்டுமே தமிழி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவை கர்நாடகத்திலிருந்து வந்த சமணர்களால் நமக்கு அளிக்கப்பட்ட கொடையே இத்தகைய எழுத்துருக்கள், என பரவலாய் நம்பப்பட்டு வந்தது. இதற்கு நேர்மாறாய் நமது சங்க இலக்கியங்கள் நம் ஊரிலுள்ள நடுகற்களில் எழுத்து பொறிப்பு இருந்ததாக கூறியது. ஆனால் இலக்கியம் கூறும் இந்த செய்தியை நிரூபிக்கும் வண்ணம் பண்டைய எழுத்துபொறிப்புடைய நடுகல் கிடைக்காமல் இருந்தது. சங்க இலக்கியங்களையே ஏதோ வட்டார வழக்குபாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் அவை வரலாற்று ஆவணம் அல்ல, காலத்தால் பிற்ப்பட்டவை என்றரீதியில் கிளப்பிவிடப்பட்டது.


இக்கூற்றுகளை பொய்யாகச்செய்ய சங்ககாலத்தை சேன்ற மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டது. அவற்றில் ஒன்றை நேற்று கண்டோம். இன்று இரண்டாம் நடுகல்லான பொற்பனைக்கோட்டை நடுகல் குறித்து காண்போம்.


தொல்லியல்கழகமான ஆவணம் அமைப்பின் பேராசிரியர் முனைவர் சு.ராஜவேலு மற்றும் அவரது ஆய்வு மாணவர்கள் த.தங்கதுரை , சா.பாண்டியன்,ஆ.மோசஸ் குழுவினரால் அடையாளங் காணப்பட்டதுபொற்பனைக் கோட்டை நடுகல்.


கல்வெட்டு வாசகம்:


1.கோவென்கட்டிற் நெதிர 

2.ணாறு பொன்கொங்கர் விண்ண கோன்

3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு

4) அங்கபடை தாணைத் தணயன் கணங்

5) குமாரன் கல்


கோ வென்கட்டி என்பவர் காலத்தில் பொன்கொங்கர் விண்ணக்கொன் பசுக்கூட்டத்தை கவர அதவ்வன் என்பவருடைய மெய்க்காவல் படைத் தலைவனும் கோட்டையின் காவலருமாகிய “அங்கப்படை தாணையன் கணங்குமரன்” இறந்துபட்ட மைக்காக இந்த நடுகல் நட்டுவிக்கப்பட்டுள்ளது.


சங்க இலக்கியத்தில் இம்மன்னர் பற்றி குறிப்பில்லையெனினும், இங்கு மிகப்பெரிய கோட்டை இருந்துள்ளது. அதன் எச்சம் இப்பகுதியில் இன்றும் உள்ளது. 

இவ்வூருக்கு செல்லும் வழியில் இன்றும் "கொங்கதிரையன்பட்டி" எனும் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது.



காலத்தால் முற்பட்ட தமிழிக் கல்வெட்டு

 காலத்தால் முற்பட்ட தமிழிக் கல்வெட்டு :

புலிமான் கோம்பை கல்வெட்டுகள்

அசோகனே இன்றைய இந்திய எழுத்துருக்கு வித்திட்டவர், அவரது வழியில் தோன்றியதே இன்றைய இந்திய நவீன எழுத்துகள், எனும் கூற்றை உடைத்து, அவருக்கு 200 வருடம் முன்பே இங்கே எளிய மக்களும் எழுத்தறிவை பெற்றிருந்தனர், என்பதனை உணர்த்தி காட்டிய கல்வெட்டுகள் இவை. காலத்தால் முந்தைய இந்திய கல்வெட்டும் இதுவே.


வரலாற்றுச் சிறப்புமிக்க புலிமான் கோம்பை கல்வெட்டுகளை இன்று காண நேர்ந்தது. இக்கல்வெட்டுகளைக் கண்டெடுக்கும் வரையில்  முதல் தமிழிக் கல்வெட்டாக சங்ககாலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்தைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டைக் கருதி வந்தனர். ஆனால் 2006 ல்  தேனிமாவட்டத்திலுள்ள புலிமான்கோம்பை (புள்ளிமான் கோம்பை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டுகள் பொஆமு 4 ம் நூற்றாண்டு வரை பழமையானது என கருதப்படுகிறது.


இக்கல்வெட்டுகள் தமிழ்பல்கலைகழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறையைச் சார்ந்த யத்தீஸ்குமார் மற்றும் பாலமுருகன் தலைமையில் கண்டறியப்பட்டது. பொதுவாய் கருதப்படும் பொஆமு 3 ம் நூற்றாண்டிற்கு முன்பாகவே தமிழகத்தில் தமிழி இருந்து வந்துள்ளது என்பதற்கு இக்கல்வெட்டுகள் ஒரு சான்றாகும்.


#முதல்_கல்வெட்டு


'.. அன் ஊர் அதன்


..ன் அன் கல் '


என்று சிதைந்துள்ளது முதல்கல்வெட்டு. ஒரு ஊரைச் சார்ந்த ஒருவருக்கு எடுக்கப்பட்ட கல் என்ற இதற்குப் பொருளுரைக்கின்றனர்.


#இரண்டாம்_கல்வெட்டு


'வேள் ஊர் அவ்வன் பதவன்'


என்றுள்ளது இரண்டாம் கல்வெட்டு. இதில் வேள் என்பது சங்ககால வேளிர் ஆண்ட ஊரை குறிக்கும் பொருளில் உள்ளது. இதில் வேள்ஊரை சார்ந்த பதவன் மகனாகிய அவ்வனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்ற பொருள் தருகிறது.


#மூன்றாவது_கல்வெட்டு


'கல்


பேடு தீயன் அந்தவன்


கூடல் ஊர் ஆகோள்'


என்றுள்ளது மூன்றாம் கல்வெட்டு. சங்கப்பாடலில் வரும் ஆநிரை கவர்தலே இங்கு 'ஆகோள்' என்று சுட்டப்படுகிறது. கூடலூரில் நடந்த இவ்வாநிரை கவர்தல் போரில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவன் என்ற வீரனுக்கு எடுப்பித்த நடுகல் இது. இக்கல்வெட்டுகள் இன்று தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கல்வெட்டியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளன.





தமிழி கல்வெட்டுகள்-16

 தமிழி கல்வெட்டுகள்-16


விக்ரமங்கலம் தமிழி


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள ஊர் விக்ரமங்கலம். இங்குள்ள குகைத்தளத்தில் ஆறு தமிழி கல்வெட்டுகள் உள்ளது.


முதல் கல்வெட்டு:


எஇய்ல் அர்இய்தன் சேவித்ஒன்


விளக்கம்:


ஏஇய்ல் எனும் ஊரைச்சேர்ந்த 'ஆரிதன்' செய்வித்தது என்பது இதன் பொருள். 

இக்கல்வெட்டு இங்குள்ள ஒரு குகைத்தளத்தின் விதானத்தில் உள்ளது.


இரண்டாம் கல்வெட்டு:


எம்ஊர் சிழிவன் அதன்தியன்


விளக்கம்:


எம்ஊரௌ அல்லது "ஏமஊர்"ரை சேர்ந்த சிழிவன் அதன்தியன் என்பவர் இங்கு தானமளித்துள்ளார்.  சிழிவன் எனும் பெயர் அரிட்டாப்பட்டியிலும் தியன் எனும் சொல் புலிமான்கோம்பை நடுகல்லிலும் பயின்று வருகிறது!

இக்கல்வெட்டு பெரிய குகைத்தளத்தின் நெற்றிப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது


மூன்றாம் கல்வெட்டு:


அந்தைய் பிகன் மகன் வெந்அதன்


விளக்கம்:


அந்தைய் பிகன் என்பவருடைய மகன் அளித்த தானம் என்பதோ இதன் பொருள்.

இக்கல்வெட்டு படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் உள்ளது.


நான்காம் கல்வெட்டு:


பேதலை குவிரன்


விளக்கம்:


பேத்தலை எனும் ஊரினை சேர்ந்த "குவிரன்" என்பவரால் இப்படுக்கை வெட்டப்பட்டுள்ளது.

முதல் கல்வெட்டுக்கு அருகேயுள்ள படுக்கையில் இக்கல்வெட்டு உள்ளது. இதில் பயின்று வரும் குவிரன் எனும் பெயர் கீழடி மற்றும் இன்னும்பிற தமிழி கல்வெட்டுகளில் வருகிறது!


ஐந்தாம் கல்வெட்டு:


செங்(கு)விரன்


விளக்கம்:


செங்குவிரன் என்பவரால் இப்படுக்கை வெட்டப்பட்டுள்ளது.

படுக்கையொன்றின் முகப்பில் இக்கல்வெட்டு உள்ளது.


ஆறாம் கல்வெட்டு:


கு(வி)ரதன்


விளக்கம்:


குவிரதன் என்பவரால் இப்படுக்கை ஏற்டுத்தப்பட்டுள்ளது.


இக்கல்வெட்டுகள் அனைத்தும் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் வெட்டப்பட்டுள்ளது! இம்மலைத்தொடர் பாண்டிய-சேர கணவாய் பகுதியில் அமைந்துள்ளது. முதன்முதலாய் இக்கல்வெட்டு 1923 ல் கண்டறியப்பட்டது.


மூன்றாம் கல்வெட்டு 
முதல் கல்வெட்டு 


நான்காம் கல்வெட்டு 
ஐந்தாம் கல்வெட்டு 


இரண்டாம் கல்வெட்டு 
முதல் கல்வெட்டு 


தமிழி எழுத்துகள்:15

 தமிழி எழுத்துகள்:15


நடுமுதலைக்குளம் தமிழி:


மதுரைமாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் எனும் ஊரின் அருகே அமைந்துள்ளது நடுமுதலைக்குளம் எனும் ஊர். இங்கு இயற்கையாய் அமைந்த இரு குகைத்தளங்கள் காணப்படுகிறது. அவற்றுள் முதலாவது குகைத்தளத்தில் தமிழி கல்வெட்டும், தொல்மாந்தர்கள் வரைந்த பாறைஓவியங்களும் காணப்படுகிறது!  எழுத்துகள் நல்ல பெரிய அளவில் 10 செ.மீ அகலத்திலும் வெட்டப்பட்டுள்ளது! 


கல்வெட்டு:


வேம்பிற்ஊர் பேர் அய்அம் சேதவர்


விளக்கம்:

வேம்பிற்றூர் எனும் ஊரினரால் இந்த பெரியகுளம் வெட்டப்பட்டது என்பது இதன் பொருள்."அயம்" எனும் சொல்லிற்கு குளம், சுனை, நீர்நிலை என அகராதிகள் பொருள் தருகின்றது. பேர் அயம் என்பதனை பெரியகுளம் என கூறலாம். இன்றும் இவ்வூர் "முதலைக்குளம்" என்று நீர்நிலையின் பெயராலேயே அழைக்கப்படுவது நோக்கத்தக்கது. இவ்வூரின் அருகே 2 கி.மீ சுற்றளவில் ஒரு பெரியகுளம் இன்றும் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த குளத்தைதான் கல்வெட்டு குறிப்பிடும் "பேர் அயம்" என கருதப்படுகிறது! 


வேம்பிற்ஊரின் சிறப்பு:


புறநானூறு மற்றும் குறுந்தொகையில் வெம்பில் ஊர் என ஒரு ஊரினை புகழ்ந்து பாடப்பாடுகிறது,அவ்வூர் இக்கல்வெட்டில் வரும் ஊராய் இருக்கலாம். திருச்சி மேலைக்கோட்டையில் காணப்படும் சிராப்பள்ளி அந்தாதி பாடிய ''வேம்பையர் கோன் நாராயண்" மற்றும் நின்றசீர் நெடுமாறனை புகழ்ந்துபாடும் பழம்பெரும் மதுரைகோவையை பாடிய சங்கரநாரயணரும் வேம்பியூரை சேர்ந்தவரே. சிவகங்கை மாவட்டத்தில் இன்றும் வேம்பையூர் என்ற ஊர் உள்ளது. அவ்வூரே இக்கல்வெட்டில் பயின்று வரும் ஊராய் இருக்கலாம்.


இக்கல்வெட்டு கி.மு.2ம் நூற்றாண்டை சேர்ந்தது.







தமிழி எழுத்துகள்-14

தமிழி எழுத்துகள்-14

தொண்டூர் தமிழி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ளது தொண்டூர். இவ்வூரில் உள்ள "பஞ்சனார் படி" எனும் மலைக்குன்றில் உள்ள குகைத்தளத்தில் தமிழி கல்வெட்டு உள்ளது. 1991 ம் ஆண்டு தொல்லியல்துறை அலுவலர் சந்திரமூர்த்தி அவர்களால் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டது.

கல்வெட்டு:

(இ) ளங்காயிபன் ஏவ அகழ்ஊரறம்
மோசி செய்த அதிடானம்.

இவ்வாக்கியத்தின் இறுதியில் மூன்று கோடுகள் காட்டப்பட்டுள்ளது. இது படுக்கைகளின் எண்ணிக்கையை குறிப்பதாய் இருக்கலாம். இளங்காயிபன் என்பவர் பணிக்க(ஏவ) அவரது ஆணைப்படி அகழூரினர் இந்த அறத்தை செய்கின்றனர். படுக்கை அல்லது இருக்கை(அதிடானம்) அமைத்தவர் மோசி என்பவராவார். 

இளங்காயிபவன் என்பவரை ஆசிவகராய் இருக்கலாம் என நெடுஞ்செழியன் கருதுகிறார். இன்றும் தொண்டூர் அருகே அகலூர் எனும் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
மோசி எனும் பெயர் புறநானூற்றிலே கூட வருகிறது! "திருந்துமொழி மோசிபாடிய ஆயும்" (புறம்-158)

இதன் காலம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு.

புகைப்பட உதவி: வரலாற்று விரும்பிகள் சங்கம்




தமிழி எழுத்துகள்-13

தமிழி எழுத்துகள்-13

குன்னக்குடி தமிழி:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-காரைக்குடி சாலையில் அமைந்துள்ளது ஊர் குன்னக்குடி, இங்குள்ள குகைத்தளத்தில் 'ஞானியர்மடம்' என்ற சிறுமண்டபமும் பிற்காலத்திய முனிவர் சிலையும் உள்ளது. இதில் வெட்டப்பட்ட நீர்வடி முகப்பில் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளது. 1909 ம் ஆண்டு இக்கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டது.

முதல் கல்வெட்டு:

காபிஊர் ஆதன்சாத்தன்

விளக்கம்:

காபிஊர்=காப்பியம்+ஊர் இன்றும் கூட சீர்காழியருகே காப்பியங்குடி எனும் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது! காப்பியம் என்பது குடிப்பெயர் ஒன்றாய் கருத இடமுள்ளது. காப்பியாற்று காப்பியனார். காப்பியன் சேந்தனார்.போன்ற புலவர்களின் பெயர்களை இதற்கு உதாரணமாய் கொள்ளலாம். காப்பியங்குடி என்பதே காப்பிஊர் என மாறியிருக்கக்கூடும். காப்பிஊரை சேர்ந்த ஆதன் சாத்தன் எனும் பெயர் மட்டும் உள்ளது. அவர் இந்த குகைத்தத்தின் நீர்வடியை ஏற்ப்படுத்தியவராய் இருக்கலாம். ஆதன் எனும் பெயர் அன்று பரவலாய் தமிழகமெங்கும் பயின்று வந்துள்ளது! இக்கல்வெட்டு தலைகீழாய் வெட்டப்பட்டுள்ளது. 

இரண்டாம் கல்வெட்டு:

ஊறு  து..

விளக்கம்:

ஊற்று ஒன்றினை ஏற்ப்படுத்தாயவர் பெயர் வந்துள்ளதை யூகிக்கலாம். ஆனால் அதற்கடுத்த எழுத்துகள்
சிதைந்துள்ளதால் முழுமையாக கூறமுடியவில்லை. இவ்விரு கல்வெட்டும் கி.பி 3 ம் நூற்றாண்டாகும்.

கல்வெட்டு படஉதவி: Saravana Manian P A






தமிழி கல்வெட்டுகள்-12

தமிழி கல்வெட்டுகள்-12

திருவாதவூர் தமிழி:

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ளது திருவாதவூர். சைவசமய குரவரான மாணிக்கவாசகர் அவதரித்த ஊர் இது. இவ்வூர் பெயராலேயே அவர் "திருவாதவூரார்" என அழைக்கப்படுகிறார்.
இந்திய கல்வெட்டு அறிக்கை 1965-1966 ல் வெளிவந்துள்ளது இக்கல்வெட்டின் அறிக்கை, அதன்பின் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் 1996 ல் மீண்டும் மறுஆய்வு செய்தார்.
இரு கல்வெட்டுகள் இங்கு வெட்டப்பட்டுள்ளது. மேலும் இங்கே பாறை ஓவியமும் உள்ளது. செஞ்சாந்து நிறத்தில் வட்டவட்டமாய் சுருள் வடிவில் நிறைய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இவ்வகை ஓவியம் உகாண்டா, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுவது சிறப்பான ஒன்று.

கல்வெட்டு 1:
"பாங்காட அர்இதன் கொட்டுப்பிதோன்"

பாங்காடு என்ற ஊரை சார்ந்த அரிதன் என்பவரால் இக்குகைத்தளம் குடைவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். திருவாதவூருக்கு அருகே 'பனங்காடி' எனும் ஊர் உள்ளது! இவ்வுரே பாங்காடு எனும் ஊராய் இருந்திருக்கலாம்.

கல்வெட்டு 2:
"உபசன் பர்அசு உறை கொட்டுப்பிதோன்"

பரசு என்ற உபசரால் இந்த குகைத்தளம் குடைவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். உபசன் என்றால் உபாத்யாசான், சமயஆசிரியர் என பொருள்படும். பல்லவ, சோழ காலத்தில் வாத்தியம் வாசிப்பவராய் இருந்துள்ளனர். திருவாய்மொழியில் 'பரசுதல்'எனும் சொல் பாடுதல் எனும் பொருளில் வருகிறது.

இவ்விரு கல்வெட்டுகளின் காலம் கி.மு இரண்டு என கணிக்கப்பட்டுள்ளது.




தமிழி கல்வெட்டுகள்-11

தமிழி கல்வெட்டுகள்-11

பெருமாள்மலை தமிழி:

மதுரை மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது முத்துப்பட்டி இங்குள்ள மலை பெருமாள்மலை, கரடிப்ட்டிமலை என அழைக்கப்படுகிறது!  1910 ம் ஆண்டு இங்கு மூன்று கல்வெட்டுகள் அறியப்பட்டன,எனினும் இரண்டே படிக்கும் நிலையில் உள்ளது. குகையின் முகப்பில் இரு தீர்த்தங்கரர் சிலை புடைப்புச்சிற்பமாய் உள்ளது. படுக்கையில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பமும் உள்ளது.

முதல் கல்வெட்டு:
நாகபேரூதைய் முசிறி கோடன் எளமகன்

விளக்கம்:

சேரநாட்டு கடற்கரை பட்டினமான முசிறியிலிருந்து இளமகனான கோடன் என்பவரின் கொடை என பொருள்கொள்ளலாம். கேரளத்தின் பட்டணம் எனும் ஊரில் நடந்த அகழாய்வில் தமிழி எழுத்துப் பொறிப்புள்ள பானைகள் கிடைத்தது. அவ்விடமே முசிறியாய் கருதப்படுகிறது! இதில் வரும் எளமகன் எனும் சொல் இளமகன் அல்லது இளையர் என பொருள் கொள்ளலாம். இளையர் என்பதற்கு போர்வீரன், எனப்பொருள் இச்சொல் பல்லவர் நடுகற்களில் பயின்று வருகிறது. நாகபேரூர் அருகேயுள்ள நாகமலைபுதுக்கோட்டையை குறிப்பதாய் இருக்கலாம். இப்பெயர் வேள்விக்குடி செப்பேடிலும் வருகிறது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கல்வெட்டு:

சைய்அளன் விந்தைஊர் கவிய்

விளக்கம்:

விந்தையூரை சேர்ந்த சைய்அளன்(அலாகாபாத் தூண் கல்வெட்டில் இப்பெயர் வருகிறது) என்பவர் அமைத்துக்கொடுத்த குகை என்பது இதன் பொருள்,இயற்கையாய் அமைந்த குகையை இவர் பதனிட்டு கொடுத்தாருக்கலாம்.கெவி என்பதற்கு குகை என ஒருபொருளும் உண்டு! இன்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் குகையை மக்கள் இவ்வாறு அழைப்பதுண்டு!

மூன்றாம் கல்வெட்டு:

திடிக் காத்தான்.... மன...(எ)ய்

விளக்கம்:

திடியன் என்ற குன்றுள்ள ஊரைச்சார்ந்த காத்தான் என்பவனின் கொடையே இந்த கற்படுக்கை என கூறலாம்.







தமிழி எழுத்துகள்-10

தமிழி எழுத்துகள்-10

மாமண்டூர் தமிழி:

திருவண்ணாமலை மாவட்டம், காஞ்சி-வந்தவாசி சாலையிலுள்ள ஊர் மாமண்டூர். 1939 ல் இங்கு தமிழி எழுத்து இருப்பதை கண்டறிந்தனர். இங்குள்ள சிறிய குன்றின் குகைத்தளத்தின் முகப்பில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது.  

கல்வெட்டு:

கணிமான்
தேனூர் தந்த கோன்குன்று ஆசி
செயிதான் தசன் சிறு
...........வன்

விளக்கம்:

சிற்றரசர்களை குறிக்கும் தமிழி எழுத்துகளில் இதுவும் ஒன்று. இதில் முதன்முதலாய் கல்வெட்டை வெட்டிய தச்சனின் பெயரும் வருகிறது! 
தேனூரை கைப்பற்றிய தலைவனான(கோன்) கனிமான் என்பவனுடைய குன்று இது. இதில் பந்தல் அமைத்து தங்கும் வசதி(ஆசி) செய்த தச்சன்(தசன்) சிறு...வன் என்பவர் ஆவர். இன்றும் பந்தல் அமைக்க அன்று ஏற்படுத்திய துளைகளுக்கு கீழேதான் கல்வெட்டு உள்ளது. சிறு எனும் வார்த்தைக்கு இடையேயுள்ள கல்வெட்டு தேய்ந்ததால் இச்சிற்பியின் பெயரை அறியமுடியவில்லை.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், கானப்பேர் தந்த உக்கிரபெருவழுதி என்ற பாண்டிய மன்னர்கள் குறித்து சங்கஇலக்கியம் பாடுகிறது. இதில்வரும் "தந்த" எனும் சொல் வெற்றிபெற்ற எனும் பொருளில் வருகிறது. அதேபோல் இக்கல்வெட்டிலும் "தேனூர் தந்த கோன்" குறித்து குறிப்புவருவதை அறியலாம். இக்கல்வெட்டின் காலம் கி.பி 3ம் நூற்றாண்டாகும்.

P.c : Thiyagarajan Ekambaram





தமிழி கல்வெட்டுகள்-09

தமிழி கல்வெட்டுகள்-09

திருப்பரங்குன்றம் தமிழி:

மதுரைநகரிலிருந்து தென்பகுதியில் 5கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மலை. இம்மலையின் உயரமான பகுதியில் ஓர் குகைத்தளம் உள்ளது. 1908 ம் ஆண்டு ஒரு கல்வெட்டும், 1950-51ல் இரண்டு கல்வெட்டும் கண்டறியப்பட்டன. 

முதல் கல்வெட்டு:

அந்துவன் கொடுபிதவன்

விளக்கம்:

அந்துவன் என்பவர் இக்கற்படுக்கையை கொடுத்தவர் என்பது பொருள். அந்துவன் என்ற பெயரில் சங்ககால புலவர்கள் இருந்துள்ளனர். சில பானைஓடுகளிலும் இப்பெயர் கிடைக்கிறது. இக்கல்வெட்டு கற்படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் அமைந்துள்ளது! 

இரண்டாம் கல்வெட்டு:

மாராயது கய(ம்)

விளக்கம்:

மாராயம் என்பது மன்னரால் வழங்கப்பட்ட ஓர் உயரிய பதவியாகும். ராஜேந்திரசோழனுக்கு கூட "பஞ்சவன் மாராயன்" எனும் பெயர் ராஜராஜனால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கயம் என்பதற்கு குளம் என்பது பொருள். மாராயன் ஒருவரால் வழங்கப்படௌட குளம் போன்ற நீர்நிலையை குறிக்கும். இத்தமிழி கல்வெட்டு இருக்கும் இடத்தில் ஓர் சுனை ஒன்று காணப்படுகிறது, அதில் நடந்து உள்ளே செல்ல படிக்கட்டும் உள்ளது. இது அவரின் கொடையாய் இருக்கலாம்.

மூன்றாம் கல்வெட்டு:

எரு காடுர் இழ குடும்பிகன் போலாலயன்  செய்தா ஆய்சயன் நெடுசாதன்

விளக்கம்:
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குடைவரையில் 4-5 ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது, அதில் "எக்காடூர்" எனும் பெயர் வருகிறது! மேலும் சங்க இலக்கியமான புறநானூரில் எருகாடூர் தாயங்கணார் எனும் புலவர் பெயர் வருகிறது! எக்காடூரும், எருகாடுரும் ஒன்றாய் இருக்க வாய்ப்புள்ளது. இக்கல்வெட்டில் வரும் எருகாடூரும் அதுவே. இழ என்பதனை ஈழ(கள் இறக்கும் குடியினர்) என்றும் குடும்பிகன் என்பதற்கு குடும்பத்தலைவன் எனவும் பொருள் காணப்பட்டு, கள்இறக்கும் குடும்பத்தின் தலைவன் என ஐராவதம் மகாதேவன் முதலிய அறிஞர்கள் கருதுகின்றனர். போலாலயன் என்பது கொடையாளியின் பெயர் ஆய்சயன நெடுசாதன் என்பது அவரது இயற்பெயராய் கூறப்படுகிறது.






தமிழி எழுத்துகள் -08

தமிழி எழுத்துகள் -08 கொங்கர் புளியங்குளம்: மதுரை-தேனி சாலையில் செக்கானூரணிக்கு அருகேயுள்ளது கொங்கர்புளியங்குளம். தமிழி Siteகளில் அதிகம் கற்படுக்கைகள் அமைந்தது இங்கேதான். அனைத்து படுக்கைககளும் நன்றாய் வழவழப்பாய் இழைத்து செதுக்கப்பட்டுள்ளது. 1910 ம் ஆண்டு இங்கு கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். இங்கு மொத்தம் மூன்று தமிழி கல்வெட்டு உள்ளது. தமிழிகல்வெட்டுக்கு பக்கவாட்டில் கொஞ்சம் தொலைவில் ஒரு சமண தீர்த்தங்கரர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. குகைத்தளத்தில் குறுகலான இடத்தில் சில பாறைஓவியங்களும் காணப்படுகிறது. கல்வெட்டுகள்: முதலாம் கல்வெட்டு: குற கொடுபிதவன் உபசஅன் உபறுவஅ(ன்) விளக்கம்: குற என்பதனை "கூரை", "கூறு(பகுதி)" எனபொருள் கொள்ளப்படுகிறது. கொடுபித என்பதனை கொட்டுபித்தவன், இந்த படுக்கைகளை கொடுத்தவன் எனவும், உபசஅன் என்பதனை உபாசன் என்ற ஆசிரியராகவும் பொருள் காணப்படுகிறது! உபறுவன் என்பதற்கு கிணறு, குளம் தோண்டும் பணியாளரை குறிக்கும் சொல் எனவே, உபாசனாகிய உபறுவன் கொடுத்த தானமாய் அளித்தது இக்கூரை என பொருள் கொள்ளலாம். இன்று அக்கூரை இல்லை. இரண்டாம் கல்வெட்டு: குறு கொடல்கு ஈத்தவன் செற்அதன்(ஒ)ன் விளக்கம்: செற்அதன் Or செராதன் இப்பகுதியை குடைவிப்பதற்கு தானமளித்ததை கல்வெட்டு கூறுகிறது. இறுதியில் ஓர் குறியீடு உள்ளது. இதனை பொன்னின் எடையை அல்லது எண்ணைக்குறிப்பதாய் கருதப்படுகிறது! மூன்றாம் கல்வெட்டு: பாகன் ஊர் பே(ர)தன்பிடன் இத்த வெபொன் விளக்கம்: பாகனூரைச் சேர்ந்த பிட்டன் என்பவர் அளித்த வெண்பொன் என்பது இதன் பொருள், இதில் இறுதியில் பொன்னின் நிறையை குறிக்கும் குறியீடும் உள்ளது. இதில் வரும் பாகனூர் முற்கால பாண்டியரின் வேள்விக்குடி செப்பேட்டில் வளம்பொருந்திய ஊராய் கூறப்பட்டுள்ளது. சோழவந்தான் அருகே உள்ளது இவ்வூர். வைகையாற்றின் வளம் பொருந்திய ஊர் இந்த பாகனூர் கூற்றமாகும். இதன்காலம் கி.மு.2ம் நூற்றாண்டாகும்