தமிழி கல்வெட்டுகள்-12

தமிழி கல்வெட்டுகள்-12

திருவாதவூர் தமிழி:

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ளது திருவாதவூர். சைவசமய குரவரான மாணிக்கவாசகர் அவதரித்த ஊர் இது. இவ்வூர் பெயராலேயே அவர் "திருவாதவூரார்" என அழைக்கப்படுகிறார்.
இந்திய கல்வெட்டு அறிக்கை 1965-1966 ல் வெளிவந்துள்ளது இக்கல்வெட்டின் அறிக்கை, அதன்பின் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் 1996 ல் மீண்டும் மறுஆய்வு செய்தார்.
இரு கல்வெட்டுகள் இங்கு வெட்டப்பட்டுள்ளது. மேலும் இங்கே பாறை ஓவியமும் உள்ளது. செஞ்சாந்து நிறத்தில் வட்டவட்டமாய் சுருள் வடிவில் நிறைய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இவ்வகை ஓவியம் உகாண்டா, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுவது சிறப்பான ஒன்று.

கல்வெட்டு 1:
"பாங்காட அர்இதன் கொட்டுப்பிதோன்"

பாங்காடு என்ற ஊரை சார்ந்த அரிதன் என்பவரால் இக்குகைத்தளம் குடைவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். திருவாதவூருக்கு அருகே 'பனங்காடி' எனும் ஊர் உள்ளது! இவ்வுரே பாங்காடு எனும் ஊராய் இருந்திருக்கலாம்.

கல்வெட்டு 2:
"உபசன் பர்அசு உறை கொட்டுப்பிதோன்"

பரசு என்ற உபசரால் இந்த குகைத்தளம் குடைவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். உபசன் என்றால் உபாத்யாசான், சமயஆசிரியர் என பொருள்படும். பல்லவ, சோழ காலத்தில் வாத்தியம் வாசிப்பவராய் இருந்துள்ளனர். திருவாய்மொழியில் 'பரசுதல்'எனும் சொல் பாடுதல் எனும் பொருளில் வருகிறது.

இவ்விரு கல்வெட்டுகளின் காலம் கி.மு இரண்டு என கணிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment