தமிழி கல்வெட்டுகள்-09

தமிழி கல்வெட்டுகள்-09

திருப்பரங்குன்றம் தமிழி:

மதுரைநகரிலிருந்து தென்பகுதியில் 5கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மலை. இம்மலையின் உயரமான பகுதியில் ஓர் குகைத்தளம் உள்ளது. 1908 ம் ஆண்டு ஒரு கல்வெட்டும், 1950-51ல் இரண்டு கல்வெட்டும் கண்டறியப்பட்டன. 

முதல் கல்வெட்டு:

அந்துவன் கொடுபிதவன்

விளக்கம்:

அந்துவன் என்பவர் இக்கற்படுக்கையை கொடுத்தவர் என்பது பொருள். அந்துவன் என்ற பெயரில் சங்ககால புலவர்கள் இருந்துள்ளனர். சில பானைஓடுகளிலும் இப்பெயர் கிடைக்கிறது. இக்கல்வெட்டு கற்படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் அமைந்துள்ளது! 

இரண்டாம் கல்வெட்டு:

மாராயது கய(ம்)

விளக்கம்:

மாராயம் என்பது மன்னரால் வழங்கப்பட்ட ஓர் உயரிய பதவியாகும். ராஜேந்திரசோழனுக்கு கூட "பஞ்சவன் மாராயன்" எனும் பெயர் ராஜராஜனால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கயம் என்பதற்கு குளம் என்பது பொருள். மாராயன் ஒருவரால் வழங்கப்படௌட குளம் போன்ற நீர்நிலையை குறிக்கும். இத்தமிழி கல்வெட்டு இருக்கும் இடத்தில் ஓர் சுனை ஒன்று காணப்படுகிறது, அதில் நடந்து உள்ளே செல்ல படிக்கட்டும் உள்ளது. இது அவரின் கொடையாய் இருக்கலாம்.

மூன்றாம் கல்வெட்டு:

எரு காடுர் இழ குடும்பிகன் போலாலயன்  செய்தா ஆய்சயன் நெடுசாதன்

விளக்கம்:
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குடைவரையில் 4-5 ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது, அதில் "எக்காடூர்" எனும் பெயர் வருகிறது! மேலும் சங்க இலக்கியமான புறநானூரில் எருகாடூர் தாயங்கணார் எனும் புலவர் பெயர் வருகிறது! எக்காடூரும், எருகாடுரும் ஒன்றாய் இருக்க வாய்ப்புள்ளது. இக்கல்வெட்டில் வரும் எருகாடூரும் அதுவே. இழ என்பதனை ஈழ(கள் இறக்கும் குடியினர்) என்றும் குடும்பிகன் என்பதற்கு குடும்பத்தலைவன் எனவும் பொருள் காணப்பட்டு, கள்இறக்கும் குடும்பத்தின் தலைவன் என ஐராவதம் மகாதேவன் முதலிய அறிஞர்கள் கருதுகின்றனர். போலாலயன் என்பது கொடையாளியின் பெயர் ஆய்சயன நெடுசாதன் என்பது அவரது இயற்பெயராய் கூறப்படுகிறது.






No comments:

Post a Comment