காலத்தால் முற்பட்ட தமிழிக் கல்வெட்டு

 காலத்தால் முற்பட்ட தமிழிக் கல்வெட்டு :

புலிமான் கோம்பை கல்வெட்டுகள்

அசோகனே இன்றைய இந்திய எழுத்துருக்கு வித்திட்டவர், அவரது வழியில் தோன்றியதே இன்றைய இந்திய நவீன எழுத்துகள், எனும் கூற்றை உடைத்து, அவருக்கு 200 வருடம் முன்பே இங்கே எளிய மக்களும் எழுத்தறிவை பெற்றிருந்தனர், என்பதனை உணர்த்தி காட்டிய கல்வெட்டுகள் இவை. காலத்தால் முந்தைய இந்திய கல்வெட்டும் இதுவே.


வரலாற்றுச் சிறப்புமிக்க புலிமான் கோம்பை கல்வெட்டுகளை இன்று காண நேர்ந்தது. இக்கல்வெட்டுகளைக் கண்டெடுக்கும் வரையில்  முதல் தமிழிக் கல்வெட்டாக சங்ககாலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்தைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டைக் கருதி வந்தனர். ஆனால் 2006 ல்  தேனிமாவட்டத்திலுள்ள புலிமான்கோம்பை (புள்ளிமான் கோம்பை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டுகள் பொஆமு 4 ம் நூற்றாண்டு வரை பழமையானது என கருதப்படுகிறது.


இக்கல்வெட்டுகள் தமிழ்பல்கலைகழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறையைச் சார்ந்த யத்தீஸ்குமார் மற்றும் பாலமுருகன் தலைமையில் கண்டறியப்பட்டது. பொதுவாய் கருதப்படும் பொஆமு 3 ம் நூற்றாண்டிற்கு முன்பாகவே தமிழகத்தில் தமிழி இருந்து வந்துள்ளது என்பதற்கு இக்கல்வெட்டுகள் ஒரு சான்றாகும்.


#முதல்_கல்வெட்டு


'.. அன் ஊர் அதன்


..ன் அன் கல் '


என்று சிதைந்துள்ளது முதல்கல்வெட்டு. ஒரு ஊரைச் சார்ந்த ஒருவருக்கு எடுக்கப்பட்ட கல் என்ற இதற்குப் பொருளுரைக்கின்றனர்.


#இரண்டாம்_கல்வெட்டு


'வேள் ஊர் அவ்வன் பதவன்'


என்றுள்ளது இரண்டாம் கல்வெட்டு. இதில் வேள் என்பது சங்ககால வேளிர் ஆண்ட ஊரை குறிக்கும் பொருளில் உள்ளது. இதில் வேள்ஊரை சார்ந்த பதவன் மகனாகிய அவ்வனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்ற பொருள் தருகிறது.


#மூன்றாவது_கல்வெட்டு


'கல்


பேடு தீயன் அந்தவன்


கூடல் ஊர் ஆகோள்'


என்றுள்ளது மூன்றாம் கல்வெட்டு. சங்கப்பாடலில் வரும் ஆநிரை கவர்தலே இங்கு 'ஆகோள்' என்று சுட்டப்படுகிறது. கூடலூரில் நடந்த இவ்வாநிரை கவர்தல் போரில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவன் என்ற வீரனுக்கு எடுப்பித்த நடுகல் இது. இக்கல்வெட்டுகள் இன்று தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கல்வெட்டியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளன.





No comments:

Post a Comment