தமிழி எழுத்துகள்-05

தமிழி எழுத்துகள்-05

ஐயர்மலை:

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திலுள்ளது ஐயர்மலை. இம்மலையின் உச்சியில் உள்ள குகைத்தளத்தில் உள்ள படுக்கையில் தமிழி கல்வெட்டு ஒன்றுள்ளது. பொதுவாக இம்மாதிரி படுக்கைகள் உள்ள இடங்களை "பஞ்சபாண்டவர்"படுக்ககைள், அல்லது "பஞ்சபாண்டவர் மலை" "ஐவர்மலை" என தமிழகம் முழுவதும் அழைக்கின்றனர். மகாபாரதத்தின் தாக்கம் காரணமாக, இவ்வாறு மக்கள் அழைக்கின்றனர். இன்றும் இவ்வாறான படுக்கைகள் உள்ள இடங்களில் பாண்டவர்கள் வனவாசத்தின்போது தங்கியதாய் கருதுகின்றனர். எனவே இதேபோன்ற மலைகள், படுக்கைகள் உள்ள இடங்களை இவ்வாறு அழைக்கின்றனர்.இதே போன்ற நம்பிக்கையும் தான் ஆஞ்சிநேயரின் சிரஞ்சீவிமலையும்! மூலிகை மலையை பெயர்த்து எடுத்து ஆஞ்சிநேயர் கொண்டுவரும்போது சிதறிய மலைதான் தங்கள் ஊர்மலை என தமிழகத்தில் பல மலைகளை நம் மக்கள் நம்பிக்கையுடன் கூறுவர், அதற்கு காரணம் அம்மலையின் மூலிகைவளம் மற்றும் அதனோடு தொடர்புடைய இராமாயண Mythology!
இதேகதைதான் இந்த ஐயர்மலைக்கும், ஐவர்மலை என்பது மருவி ஐயர்மலை ஆனது. தமிழி கல்வெட்டு அமைந்துள்ள இடங்களில் மிகவும் ஆபத்தான இடம் இம்மலையே. சென்று பார்ப்பதற்கு சரியான பாதை கிடையாது. வழுக்குப்பாறை மற்றும் செங்குத்தான இடத்தில் இக்குகைத்தளம் அமைந்துள்ளது.

கல்வெட்டு:

பனைதுறை வெஸன் அதட்அனம்

விளக்கம்:

பனைத்துறை எனும் இடத்தைச்சேர்ந்த வெஸன் என்பவர் அமைத்துக்குடுத்த இருக்கை என்பது இதன் பொருள்.
முதல்சொல் மட்டுமே இங்கு தமிழ் மற்ற இரண்டு சொல்லும் பிராகிருதம் ஆகும். துறை என்பது நீர்நிலைச்சார்ந்த பகுதியினை குறிக்கும். இம்மலைக்கு அருகே காவிரியாற்று நீர்த்துறை உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே பனைதுறை என்பது காவிரிக்கு அருகேயுள்ள ஊராய் இருக்கும். வெஸ்ஸ எனும் சொல்லினை வைஸ்ய எனும் சொல்லாய் கருதி வணிகன் என்று கருதுகின்றனர். பனைதுறையின் பிரபலமான வணிகனாய் இவர் இருக்கக்கூடும். அதட்அனம் என்பதை அதிட்டானம் என சேர்த்து பொருள் கொள்ளலாம். கி.மு முதல் நூற்றாண்டு என இக்கல்வெட்டு கருதப்படுகிறது!







1 comment: