தமிழி கல்வெட்டுகள்-06

தமிழி கல்வெட்டுகள்-06

கீழவளவு தமிழி:

மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கீழவளவு கிராமம். அங்குள்ள "பஞ்சபாண்டவர் மலை" எனப்படும் மலைக்குன்றில் இயற்கையான குகைத்தளம் அமைந்துள்ளது. அந்த குகைத்தளத்தின் கீழே வழவழப்பாக இழைக்கப்பட்ட பல கற்படுக்கைகள் உள்ளன. இக்குகைத்தளத்தின் மேற்பகுதியில் நீர்உட்புகா வண்ணம் ஓர் நீர்வடி வெட்டப்பட்டுள்ளது. அதன்மேலே ஓர் தமிழி கல்வெட்டு காணப்படுகிறது 1906 ம் ஆண்டு வெண்கோபராவால் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்குகைத்தளத்திற்கு பின்புறம் சமணதீர்த்தங்கரர் உருவங்கள் உள்ளது.
இக்கல்வெட்டின் சில எழுத்துகள் நேராகவும், சில தலைகீழாகவும் சில எழுத்துகள் இடம் வலமாகவும் மாறி வெட்டியுள்ளனர். (கல்வெட்டு தகவலை எழுதிகொடுத்த ஓலையை, கல்லில் வெட்டுவோர், தலைகீழாக ஓலையைபிடித்து மாற்றி ஏதும் வெட்டிவிட்டாரோ என தெரியவில்லை)

கல்வெட்டு செய்தி:

உப(ச)அன் தொண்டி (ல) வோன்கொடு பளிஇ

விளக்கம்:

உபசன் எனும் சொல்லை சமயம்சார்ந்த ஆசிரியர் என பொருள் கொள்ளலாம்.இதே உபசன் எனும் சொல் கொங்கர்புளியங்குளம், திருவாதவூர் கல்வெட்டிலும் வருகிறது. பாண்டியநாட்டின் கடற்கரை நகரமாய் விளங்கிய 'தொண்டி' நகரம் 2200 ஆண்டுகள் முன்பே அதே பெயரில் இக்கல்வெட்டிலும் வருவது சிறப்பான ஒன்று. சங்கஇலக்கியமான குறுந்தொகையிலும் தொண்டி நகர் குறித்த குறிப்புகள் உண்டு. பளிஇ என்பதனை பள்ளி என கூறலாம். தொண்டியைச் சேர்ந்த உபசன் என்பவர் கொடுத்த தானம் இப்பள்ளி என்பது இதன் பொருள். தொண்டியிலிருந்து வந்து ஒரு சமயஆசிரியர் இத்தானம் அளித்துள்ளார், செல்வாக்கான மனிதராய் அவர் இருந்திருப்பார் போலும். இக்கல்வெட்டு கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

மேலும் இக்கல்வெட்டை காணொளியாக காண :







1 comment: